பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் கருவூலத்தில் விண்ணப்பிக்கலாம்


பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் கருவூலத்தில் விண்ணப்பிக்கலாம்
x

ஆண்டு நேர்காணலில் பங்கேற்க பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் கருவூலத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்

ஓய்வூதியர்கள் நேர்காணல்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கும் வகையில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும்.

கொரோனா பெறும் தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டிற்கான நேர்காணல் நடைபெறாத நிலையில் தற்போது அரசாணை நிலை எண் படி ஓய்வூதியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒருமுறையை பின்பற்றி இவ்வாண்டிற்கான (2022-23) நேர்காணல் செய்து கொள்ள வேண்டும்.

மின்னணு வாழ்நாள் சான்று

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

அல்லது அரசு இ-சேவா மற்றும் பொதுசேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். அல்லது ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். கருவூல முகாம் இலவச சேவையை பயன்படுத்தி இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

இணையதளத்தில் பதிவிறக்கம்

மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண், பி.பி.ஒ. எண், வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை www.tn.gov.in/karuvoolam/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஓய்வூதியர் வங்கி கணக்கு உள்ள வங்கியின் கிளைமேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) தாசில்தார், துணை தாசில்தார் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் இருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலர், மாஜிஸ்திரேட், நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பலாம்.

குறைபாடுகள் இருப்பின்...

மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம். ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணலில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் தொடர்புடைய மாவட்டக்கருவூல அலுவலர் அல்லது மண்டல இணை இயக்குனர் அல்லது சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையரகம், பேராசிரியர் அன்பழகன் மாளிகை, 3-வது தளம், சென்னை- 600036 என்ற முகவரிக்கோ, dta.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 044-24321761, 044-24321764, 044-24321765 என்ற தொலைபேசி எண்களுக்கோ அல்லது திருச்சி மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தை rjdtry@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 0431-2414046 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவித்து பயன்பெறலாம்.

மேலும் அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் அரியலூர் கருவூலத்தினை 04329-228910 என்ற தொலைபேசி எண்ணிலும், dtoari.tndta@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story