மரங்களை அகற்ற பசுமை குழுவிடம் அனுமதி பெற வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் யாரும் மரங்களை அகற்ற வேண்டும் என்றால் பசுமை குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் யாரும் மரங்களை அகற்ற வேண்டும் என்றால் பசுமை குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
அனுமதி பெற வேண்டும்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பசுமை குழு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
பொதுமக்கள் யாரும் மரங்களை அகற்ற வேண்டும் என்றால் பசுமை குழுவிடம் விண்ணப்பங்களை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் பசுமைக் குழு சம்பந்தப்பட்ட இடத்தினை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் 30 ஆயிரம் மரகன்றுகள் உற்பத்தி செய்து தயார் நிலையில் உள்ளது. மேலும் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அடுத்த ஆண்டு 15 லட்சம் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு நடவுசெய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தவிர்க்க வேண்டும்
மாவட்டத்தில் அனைத்து நகராட்சி பகுதிகளிலும் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் மூலமாக விற்பனை செய்யப்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து, கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சரியாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன், தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா, உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, நகராட்சி ஆணையாளர்கள் ஜெயராமராஜா, பழனி, மாரிசெல்வி, ஷகிலா, வனச்சரக அலுவலர் பிரபு, பசுமைக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், சத்யராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.