5 பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி


5 பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி
x

திருச்சுழி அரசு கல்லூரியில் 5 பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பிக்க வருகிற 7-ந் தேதி கடைசி நாள் எனவும் கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

விருதுநகர்

காரியாபட்டி,

திருச்சுழி அரசு கல்லூரியில் 5 பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பிக்க வருகிற 7-ந் தேதி கடைசி நாள் எனவும் கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

கலெக்டர் ஆய்வு

திருச்சுழியில் அரசு கலை கல்லூரி தொடங்குவதற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட திருச்சுழி இந்து நாடார்கள் உறவின் முறை பள்ளியை கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:- திருச்சுழியில் அரசு கலைகல்லூரி தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 2022-23-ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதியும், அதில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், வேதியியல், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இணையதளம்

மேலும் தற்காலிகமாக அமைய உள்ள திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் இணைய வழியாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் ஏ.எப்.சி. மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவுக்கட்டணம் ரூ.2 மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பம் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம்.

கடைசி நாள்

இணையதள வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் செலுத்தலாம். இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 7-ந் தேதி ஆகும்.

இந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.காம்.வணிகவியல், பி.எஸ்.சி., வேதியியல் மற்றும் பி.எஸ்.சி., கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன்முத்துராமலிங்கம், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், திருச்சுழி தாசில்தார் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story