திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய பழைய கட்டிடம்


திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய பழைய கட்டிடம்
x
திருப்பூர்


பூட்டிய நிலையில் இருக்கும் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய பழைய கட்டிடத்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

போலீஸ் நிலைய கட்டிடம்

திருப்பூர் மாநகரில் புதிதாக உருவாக்கப்பட்ட திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி முதல் திருமுருகநாதசுவாமி கோவில் அருகே செயல்பட்டு வந்தது. போலீஸ் நிலைய கட்டிடம் சிறியதாக இருந்ததால் போலீசாருக்கும், புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் போதுமான வசதிகள் இல்லாமல் இருந்தது. இதையடுத்து ராக்கியாபாளையத்தில் போலீஸ் நிலைய புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. மேலும் பழைய கட்டிடத்தில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் அனைத்தும் புதிய கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடந்த மாதம் 18-ந்தேதி முதல் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் அங்கு முழுமையாக செயல்பட தொடங்கியது.

இதனால் போலீஸ் நிலைய பழைய கட்டிடம் மூடப்பட்டது. அந்த கட்டிடத்தின் அருகே திருமுருகன்பூண்டி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான கர்ப்பிணி பெண்களும், நோயாளிகளும் சிகிக்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த கட்டிடம் போதிய வசதிகள் இன்றி சிறிய அளவில் உள்ளது.

வழங்க வேண்டும்

எனவே தற்போது பூட்டிய நிலையில் யாருக்கும் போலீஸ் நிலைய கட்டிடத்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் அதன் அருகிலேயே தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே போலீஸ் நிலைய கட்டிடத்தின் ஒரு பகுதியை தபால் நிலையத்திற்கும் வழங்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை, திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகம், தபால்துறை ஆகியவை சரியான முடிவு எடுத்து போலீஸ் நிலைய பழைய கட்டிடத்தை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.


Next Story