ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை


சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருப்பத்தூர்

தீவிர கண்காணிப்பு

நாடு முழுவதும் 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில்களில் சோதனை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி, உஷாராணி உள்ளிட்ட ரெயில்வே போலீசார் நேற்று முதல் ரெயில் நிலையங்களில் உள்ள அனைத்து பிளாட்பாரங்கள், தண்டவாள பகுதி மற்றும் பயணிகளின் இருக்கைகள், ஓடும் ரெயில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் பொருட்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, அதன்பிறகே ரெயில் நிலையத்துக்குள் அனுமதித்து வருகின்றனர். இதேபோன்று ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story