போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் தொந்தரவு


போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் தொந்தரவு
x

செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் பரபரப்பு புகார் அளித்தார்.

திருச்சி

செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் பரபரப்பு புகார் அளித்தார்.

பாலியல் தொந்தரவு

திருச்சி காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் திருச்சியில் தங்கி முதுகலை கணிதவியல் பட்டம் படித்து வருகிறேன். ஒரு தனியார் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்தேன். தற்போது என் நண்பர்களுடன் சேர்ந்து நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறேன். கடந்த மார்ச் மாதம் எனது உறவினர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக நான் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்றபோது, மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், எனக்கு உதவுவதுபோல் பேச ஆரம்பித்தார். பின்னர் எனது செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு, கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் அவர் எனக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி என்னை உல்லாசத்துக்கு அழைத்தார். அதற்கு நான் மறுத்ததால் தொடர்ந்து ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்தார்.

இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

இது தொடர்பாக நான் துணை கமிஷனரை சந்தித்து புகார் கொடுக்க சென்றபோது, என்னை போலீஸ் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சிலர் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். மேலும், எனது செல்போனை பிடுங்கி இன்ஸ்பெக்டர் அனுப்பிய ஆபாச மெசேஜ்கள் மற்றும் படங்களை அழித்துவிட்டு கொடுத்தனர். ஆகவே தொடர்ந்து எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த இன்ஸ்பெக்டர் மற்றும் அடித்து சித்ரவதை செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

தற்போது இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு பாலியல் தொந்தரவு செய்த உறவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு அதிகாலை நேரத்தில் தீக்குளிக்க முயன்றார். அதன்பிறகே கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் தொந்தரவு கொடுத்த அவரது உறவினரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story