ராமநத்தம் அருகே சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் போலீஸ் விசாரணை


ராமநத்தம் அருகே சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் போலீஸ் விசாரணை
x

ராமநத்தம் அருகே சந்தன மரங்கள் வெட்டி கடத்தியது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்த ம.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கான் மகன் நாராயணசாமி (வயது 70). இவரது ஒரு ஏக்கர் நிலத்தில் 107 சந்தன மரக்கன்றுகளை நட்டு வைத்து, கடந்த 15 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில், வனத்துறையினரிடம் இந்த மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கடிதம் வாங்கி இருந்தார்.

தொடர்ந்து நேற்று காலை நாராயணசாமி தனது நிலத்துக்கு சென்றார். அப்போது, அங்கு 15 சந்தன மரங்கள் வெட்டி கடத்தி செல்லப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும், மற்ற மரங்கள் வெட்டி சேதப்படுத்தப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ராமநத்தம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து வெட்டப்பட்ட மரங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story