விவசாயி வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விவசாயி வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.1 கோடி கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்,

சேலம் மாவட்டம் சாமியார் கிணறு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார்கள்.

கடந்த 7-ந் தேதி இரவு கார்த்திகை மாதம் பவுர்ணமியையொட்டி அதே ஊரில் உள்ள புற்றுமாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு லோகநாதன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்தன.

ரூ.1 கோடி கொள்ளை

மேலும் பீரோக்களில் வைத்திருந்த ரூ.1 கோடியை காணவில்லை. இதனால் லோகநாதன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து கைவரிசையை காட்டி உள்ளனர்.

இதுகுறித்த போலீசார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story