நாகையில், தபால் நிலையத்தை முற்றுகையிட்டு தொழிற்சங்கத்தினர் போராட்டம்செல்வராசு எம்.பி. உள்பட 250 பேர் கைது


நாகையில், தபால் நிலையத்தை முற்றுகையிட்டு தொழிற்சங்கத்தினர் போராட்டம்செல்வராசு எம்.பி. உள்பட 250 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2023 7:15 PM GMT (Updated: 24 Jan 2023 7:15 PM GMT)

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்கக்கோரி நாகையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செல்வராசு எம்.பி. உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம்

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்கக்கோரி நாகையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செல்வராசு எம்.பி. உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

முற்றுகை போராட்டம்

மத்திய, மாநில அரசு துறைகளில் 240 நாட்கள் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது.

ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வாரிசுதாரர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும். தொழிலாளர்கள் நல வாரியத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

250 பேர் கைது

போராட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் செல்வராசு எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமன், மாவட்ட பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக தலைமை தபால் நிலையத்துக்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி செல்வராசு எம்.பி. உள்பட 250 பேரை நாகை டவுன் போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story