வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்


வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2023 9:00 PM GMT (Updated: 17 Jun 2023 9:00 PM GMT)

வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனியை அடுத்த வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 11 மற்றும் 12-வது வார்டுகளில் கடந்த ஒருமாதமாக குடிநீர் சரிவர வரவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கடந்த வாரம் வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனாலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் 11, 12-வது வார்டு பகுதி பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்துக்குள் புகுந்தனர். பின்னர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்களிடம், பேரூராட்சி செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 11, 12-வது வார்டுகளில் குடிநீர் சீராக வழங்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story