தஞ்சை பெரியக் கோவிலில் ராஜராஜ சோழனின் 1037-ம் ஆண்டு சதய விழா தொடக்கம்


தஞ்சை பெரியக் கோவிலில் ராஜராஜ சோழனின் 1037-ம் ஆண்டு சதய விழா தொடக்கம்
x

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவிலில் ராஜராஜ சோழனின் 1037-ம் ஆண்டு சதய விழா தொடங்கி உள்ளது.

தஞ்சை,

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,037-வது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது.

தொடர்ந்து திருமுறை பாராயணம் மற்றும் பட்டிமன்றம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழாவின் இரண்டாம் நாளான நாளை காலை எட்டு மணிக்கு மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார். தொடர்ந்து திருமுறை வீதி உலாவும், அதனை தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.

மேலும் பெருவுடையாருக்கும், பெரிய நாயகிக்கும் 48 வகையான பேராபிஷேகமும் நடைபெற உள்ளது. சதய விழாவை முன்னிட்டு இன்றைய தினம் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராஜராஜன் பெருமையை பறைசாற்றும் வகையில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, தேவார இன்னிசை அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.


Next Story