வாசிப்புத்திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் திட்டம் அமல்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்


வாசிப்புத்திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் திட்டம் அமல்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
x

வாசிப்புத்திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சி

ரீடிங் மாரத்தான்

திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தொடர் நிகழ்வாக மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த தமிழக பள்ளிக்கல்வித் துறை கூகுள் நிறுவனத்தின் வழியே "ரீடிங் மாரத்தான்" என்கிற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது.

அதன்படி இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் தங்கள் கைப்பேசியில் "கூகுள் ரீடுஅலாங்" என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் வழியே எளிய முறையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா பகவதிபுரம் நடுநிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு வாசிப்புத்திறன் தொடர் ஓட்டம் திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவிற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளி தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- குழந்தைகளுக்கு வாசிக்கின்ற திறனை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கூகுள் நிறுவனத்துடன் ஒரு மாதத்திற்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தியது. அதன் முக்கிய அம்சம் குழந்தைகளுக்கு வாசிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த திட்டத்தை 1-ந் தேதி முதல் வரும் 12-ந் தேதி வரை தொடர்ந்து நடத்த இருக்கிறோம்.

இல்லம் தேடிக்கல்வி மையங்கள்

தமிழகத்தில் 1 லட்சத்து 81 ஆயிரம் இல்லம் தேடிக்கல்வி மையங்கள் உள்ளன. இங்குள்ள தன்னார்வலர்கள் தங்களுடைய செல்போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் படிக்க செய்வார்கள். குழந்தைகளை படிக்கும்போது 100 வார்த்தைகள் கொண்ட சிறிய கதை முதல் 400 வார்த்தைகள் கொண்ட பெரிய கதை வரை படிக்க செய்வார்கள். 4 கட்டமாக இதற்கு உரிய பயிற்சிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

அப்படி படிக்கும்போது செயற்கையான நுண்ணறிவு ஏற்படும். முழுமையாக படிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக படிக்க வேண்டும் என்பதற்காக கூகுள் வாசிப்பு கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த செயலியின் பெயர் கூகுள் ரீடு அலாங் என்பதாகும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வல தொண்டர்கள் மூலம் செய்ய வேண்டும் என்பதே எங்களது ஆசை. அதில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். 13-ந் தேதி முதல் 1-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளது.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் வாசிப்புத் திறனுக்காக கதைகளோடு புகைப்படங்களும் இருப்பதால் படிப்பதற்கு அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 12-ந் தேதி வரை இந்த வாசிப்புத்திறன் பயிற்சி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story