காட்பாடி ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது


காட்பாடி ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது
x

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் நடந்த சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

வேலூர்

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் நடந்த சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் லாரிகளை நிற்க வைத்து பாலத்தின் உறுதி தன்மையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ரெயில்வே மேம்பாலம்

காட்பாடி ரெயில்வே மேம்பாலம் மங்களூரு- விழுப்புரம் சாலையில் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்தன. இது தமிழகத்தையும் ஆந்திராவையும் இணைக்கும் மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலம் வழியாகத்தான் சித்தூர், திருப்பதிக்கு பஸ்கள், லாரிகள் இயக்கப்பட்டு வந்தன.

தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் லாரிகள், பஸ்கள் சென்று வந்ததால் மேம்பாலம் வலுவிழந்தது. மேலும் பாலத்தில் ஆங்காங்கே விரிசல்கள் காணப்பட்டன.

இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டது. இதன் காரணமாக காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் மேம்பலம் சீரமைப்பு பணி நடந்தது. இதற்காக மேம்பாலம் மூடப்பட்டது. அதனால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வந்தன. இந்த சீரமைப்பு பணிகள் ஒரு மாதம் நடந்தது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து மேம்பாலத்தை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல போக்குவரத்து அலுவலர் செந்தில் வேலன், தேசிய நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் மேம்பாலத்தில் 4 லாரிகளை நிற்க வைத்து மேம்பாலத்தின் உறுதி தன்மையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.


Next Story