நீரிழிவு நோயால் விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றம் - தேமுதிக அறிக்கை


நீரிழிவு நோயால் விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றம் - தேமுதிக அறிக்கை
x

நீரிழிவு நோயால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது.

சென்னை,

நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். அவரது பெயரில் அறிக்கைகள் மட்டும் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம். சமீபத்தில் விஜயகாந்த் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை எனக்கூறி 3 விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இது தொடர்பாக தேமுதிக தலைமை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.

மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிசிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார்.

விஜயகாந்த் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story