சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட 3 மணி நேரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

கரியாப்பட்டினம்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட 3 மணி நேரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சாலையின் நடுவே பள்ளம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் செட்டித்தெரு உள்ளது. இந்த தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள சாலையின் நடுவே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் இந்த வழியாக சென்று வந்த வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழ விழும் நிலை இருந்தது. இந்த அபாய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று படத்துடன் வெளி வந்தது.

3 மணி நேரத்தில் சீரமைப்பு

இதன் எதிரொலியாக செய்தி வெளியான 3 மணி நேரத்தில் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தேத்தாகுடி தெற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம், துணை தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சேதமடைந்த சாலையை பார்வையிட்டு பணியாளர்கள் மூலம் பள்ளத்தை சீரமைத்தனர்.இதை தொடா்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்


Next Story