இன்று குடியரசு தின விழா:பஸ், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


இன்று குடியரசு தின விழா:பஸ், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு

இன்று (வியாழக்கிழமை) குடியரசு தின விழாவையொட்டி பஸ், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா

குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தீவிர சோதனை

ஈரோடு ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாக பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். ஓடும் ரெயில்களிலும் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகிறார்கள்.

இதேபோல் பஸ் நிலையங்கள் உள்பட பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு காவிரி ஆற்று ரெயில்வே பாலத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story