ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம


தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் 917 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் 917 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

தமிழகம் முழுவதும் ஏ.ஐ.டி.யு.சி. சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலநிதி வழங்க வேண்டும், உப்பு தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும், பொதுத்துறையை தனியாருக்கு வழங்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகர ஏ.ஐ.டி.யு.சி சார்பில் தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.

கைது

போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. பொதுத் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் தனலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கரும்பன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஞானசேகரன், வீட்டு வேலை பணியாளர் சங்க தலைவர் மனோன்மணி, கட்டுமான சங்க பொறுப்பாளர் சுப்பிரமணியன், உப்பு சங்க தலைவர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தால் டபிள்யூ.ஜி.சி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட 88 பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்தனர்.

எட்டயபுரம்

இதேபோன்று எட்டயபுரம் பஸ்நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு கட்டுமான சங்க மாநில செயலாளர் சேது தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சோலையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்போராட்டத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வந்த எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் தலைமையிலான மறியலில் ஈடுபட்ட 178 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

விளாத்திகுளம்

இதேபோல் விளாத்திகுளம் பஸ்நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் பிச்சையா தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 29 பெண்கள் உட்பட 81 ஏ.ஐ.டி.யு.சி.யினரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதேபோன்று புதியம்புத்தூர், திருச்செந்தூர், கோவில்பட்டி, கயத்தாறு, நாசரேத் ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 503 பெண்கள் உள்பட 917 பேரை கைது செய்தனர்.


Next Story