சாலை சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்


சாலை சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
x

சாலை சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்

நாகப்பட்டினம்

மத்தளங்குடி-பில்லாளி இடையே சாலை சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்தளங்குடி-பில்லாளி

திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சி மத்தளங்குடி, அனவாசநல்லூர், பில்லாளி கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலை உள்ளது. 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையை மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பயத்தாங்குடி, திருமருகல், திருக்கண்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வந்தனர்.

அதேபோல் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்துச்செல்வதற்கும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் காயம்

மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். பில்லாளி செல்லும் 3 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலை 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் ஜல்லிகற்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சாலை சீரமைப்பு பணி

இதனை ஏற்று அரசு ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து சாலை சீரமைக்கும் பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பின்னர்

பொக்லின் எந்திரம் மூலம் சாலைகள் பெயர்க்கப்பட்டு ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. இதையடுத்து பணிகள் நடைபெறவில்லை. ஜல்லிக்கற்கள் நிரப்பபட்ட நிலையில் சாலை உள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

துரிதப்படுத்த வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மத்தளங்குடி-பில்லாளி இடையே சாலை சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story