கல்லுக்குறுக்கி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுபழமையான பாறை ஓவியங்கள்


கல்லுக்குறுக்கி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுபழமையான பாறை ஓவியங்கள்
x

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறுக்கி கிராமத்தில் 2 ஆயிரம் பழமையான பாறை ஓவியங்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.

கிருஷ்ணகிரி

பாறை ஓவியங்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு முகாமை தொடங்கி உள்ளது. இந்த முகாமில் குகை கலை, பாறை ஓவியம், மலையேற்றம் மற்றும் மாதிரி அகழ்வாராயச்சி, தொழில்துறை வெளிப்பாடு, மலர் வளர்ப்பு உள்ளிட்ட செயல்பாடுகள் உள்ளது.

இந்த முகாம் 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று கிருஷ்ணகிரி அடுத்த கல்லுக்குறுக்கி கிராமத்தில் காலபைரவர் மலையில் உள்ள இருளன் கவியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.

இந்த முகாமை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்ததார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த முகாம் மூலம் பண்டைய மக்களின் வாழ்வியல், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை பற்றி அறிந்துக்கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் பயிற்சி

தற்போது கல்லுக்குறிக்கியில் 2 வீரர்களின் ஓவியங்கள் காணப்படுகிறது. இவற்றில் வீரர்கள் கத்தி, கேடயம் மற்றும் வில்அம்பு ஆகியவற்றை கொண்டு சண்டையிடுவது போன்ற காட்சி தீட்டப்பட்டுள்ளது. இது போரில் இறந்த வீரர்களை நினைவுப்படுத்த வரையப்பட்டவைகளாகும். இறந்தவர்களுடைய ஆன்மாவை குறிப்பதற்காக விளக்கு ஒன்று வரையப்பட்டுள்ளது. இதன் இருபக்கமும் சூரியர், சந்திரர் வடிவங்கள் வரையப்பட்டுள்ளது.

இந்த பாறை ஓவியம் மரப்பின் நீட்சையானது பின்னாளில் நடுக்கற்களாகவும், தற்கால நினைவு சின்னங்களாகவும் பரினாம வளர்ச்சி பெற்றுள்ளன என்றார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் அகழாய்வு குறித்த மாதிரி நிகழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

கொய்மலர்கள் சாகுபடி மையம்

இந்த பயணத்தின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் துறை அலுவலர் பரந்தாமன், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கஜேந்திரகுமார், தனி தாசில்தார் விஜயகுமார், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் நாளை (திங்கட்கிழமை) கொய்மலர்கள் சாகுபடி மையம், டான்புளோரா மலர் உற்பத்தி மையம், 17-ந் தேதி ஓசூரில் இயங்கி வரும் தொழிற்சாலைகளை பார்வையிட டைட்டான் நிறுவனம், அசோக் லைலேண்ட் நிறுவனம், 18-ந் தேதி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 19-ந் தேதி ஊட்டச்சத்து இளம்ஆய்வு தலைப்பில் பெங்களூரு விஸ்வராய அருங்காட்சியகம், குப்பம் இண்டர்நேஷ்னல் பவுண்டேசன், 22-ந் தேதி மத்திகிரி கால்நடை பண்ணை மறறும் ஓசூர் மாநகராட்சியும், 24-ந் தேதி அய்யூரில் வனத்துறையிடனருடான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் 26-ந் தேதி கிருஷ்ணகிரி அணை பூங்காவில் நிறைவு நிகழ்ச்சியும்நடக்கிறது.


Next Story