வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ரூ.1¼ கோடி மோசடி: வங்கி பெண் மேலாளர் - கணவர் கைது


வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ரூ.1¼ கோடி மோசடி: வங்கி பெண் மேலாளர் - கணவர் கைது
x

வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து தனது கணக்கிற்கு மாற்றி, ரூ.1¼ கோடி மோசடி செய்த வங்கி பெண் மேலாளர், அவரது கணவருடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை பஞ்சாப் சிந்த் வங்கியின் மண்டல மேலாளர் கன்வர்லால் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை அண்ணாசாலை மற்றும் ஜார்ஜ் டவுண் பஞ்சாப் சிந்த் வங்கி கிளைகளில் மேலாளராக 2016-முதல் 2019 வரை பணிபுரிந்தவர் நிர்மலா ராணி (வயது 59).இவர், தான் மேலாளராக பணியாற்றிய கால கட்டத்தில் அந்த வங்கி கிளைகளில் வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகை கணக்கில் இருந்து, தனது இஷ்டத்துக்கு தன்னுடைய கர்நாடக வங்கி கணக்கிற்கு ரூ.1.23 கோடியை மாற்றியுள்ளார்.

பின்னர் இந்த பணத்தை தனது கணவர் இளங்கோவனின் வங்கி கணக்கிற்கு மாற்றி ஏ.டி.எம். மூலம் பணத்தை எடுத்து மோசடி லீலைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் மீதும், அவரது கணவர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

கணவருடன் பெண் மேலாளர் கைது

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணைகமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் முத்துகுமார் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலாளர் நிர்மலா ராணி, அவரது கணவர் இளங்கோவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மோசடி செய்த பணத்தை, என்ன செய்தனர், என்று விசாரணை நடக்கிறது.


Next Story