அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதிரி 'நீட்' தேர்வு


அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதிரி நீட் தேர்வு
x

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதிரி ‘நீட்’ தேர்வு நடைபெற்றது.

திருச்சி

'நீட்' தேர்வு

மருத்துவ படிப்பிற்கான 'நீட்' தேர்வு வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளும் 'நீட்' தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து 'நீட்' தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' தேர்வு எழுத தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் அந்தந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏற்பாட்டில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படித்து வந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

சிறப்பு பயிற்சி வகுப்பு

இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதி முதல் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பொதுத்தேர்வு முடிந்தது முதல் திருச்சி அரசு சையது முர்துசா பள்ளி மற்றும் மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி, தா.பேட்டை, லால்குடி, துறையூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் என்று 7 இடங்களில் 'நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.தினமும் காலை முதல் மாலை வரை அரசு பள்ளிகளில் படித்த 220 மாணவ-மாணவிகள் இங்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள் கற்பித்து வருகிறார்கள்.

மாதிரி தேர்வு

இந்தநிலையில் வருகிற 7-ந்தேதி 'நீட்' தேர்வு நடைபெறுவதால், அந்த தேர்வை அரசு பள்ளி மாணவர்கள் பயமின்றி எழுதும் வகையில் அவர்களுக்கு மாதிரி தேர்வு அந்தந்த பயிற்சி மையங்களில் நேற்று நடத்தப்பட்டது. அப்போது, 'நீட்' தேர்வில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர். விடைத்தாள், மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு 180 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் வழங்கப்பட்டன.

காலையில் 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. 158 மாணவ-மாணவிகள் தேர்வில் கலந்து கொண்டனர். இதேபோல் 7-ந்தேதி வரை அவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story