பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்


பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்

பள்ளி, கல்லூரி விடுதிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கான 16 பள்ளி விடுதிகள், 2 கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகள் மற்றும் மாணவிகளுக்கு 10 பள்ளி விடுதிகள், 6 கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகள் என மொத்தம் 34 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சேர்க்க தகுதியுடையவர்கள் ஆவர்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ-மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர். அனைத்து விடுதி மாணவ-மாணவிகளுக்கும் உணவு மற்றும் தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள், பயிற்சி இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

ஆண்டு வருமானம்

பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. இந்த தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 21-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கை தமிழர்கள்

மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் அளிக்கலாம். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளவும், அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிபயில அனுமதிக்கப்படும். எனவே, மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story