பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு


பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
x

போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

திண்டுக்கல்

அமைச்சர் இ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கினார். உறுதிமொழியை அவர் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து 203 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி பேசும்போது, போதைப்பொருட்களின் பயன்பாடு முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு பள்ளி மாணவ-மாணவிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பள்ளிகளுக்கு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் தண்டபாணி, ஸ்ரீராமபுரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வண்ண வெங்கடசுப்பையா, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி துணை தலைவர் முருகேசன், கவுன்சிலர்கள் மலைச்சாமி, ரமேஷ், அம்பை ரவி, தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலாளர் மணி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி எல்லை ராமகிருஷ்ணன், புதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அருணாச்சலம், தி.மு.க. பொறுப்பாளர் பரமசிவம் மற்றும் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் அர.சக்கரபாணி

இதேபோல் ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கூடுதல் கலெக்டர் தினேஷ் குமார் தலைமை தாங்கினார்.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள், பெற்றோருக்கு எடுத்துரைக்க வேண்டும். வருங்கால இந்தியா உங்கள் (மாணவர்கள்) கையில் உள்ளது. இதனை மக்கள் இயக்கமாக மாணவர்கள் எடுத்து சென்றால், போதைப்பொருளை நிச்சயம் ஒழிக்க முடியும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ், நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் அய்யம்மாள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில், எம்.வி.எம். அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மேயர் இளமதி தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தார். கமிஷனர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார். இதில் மாணவிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று உறுதிமொழி எடுத்தனர். மேலும் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். கல்லூரியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் ஆர்.எம்.காலனி மெயின்ரோடு வழியாக சென்று மீண்டும் கல்லூரியை சென்றடைந்தது.

பழனி நகராட்சி பள்ளி

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, ஆணையர் கமலா, போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

இதைத்தொடர்ந்து அவரது தலைமையில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் என அனைவரும் "போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம், போதை இல்லா சமுதாயத்தை படைப்போம்" என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

சைக்கிள் ஊர்வலம்

பின்னர் பள்ளியில் நூலக கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு ஆங்கில அகராதிகளை இலவசமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் வேலுமணி, மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பழனியாண்டவர் கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் கலைக்கல்லூரி ஆகிய இடங்களிலும் பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர். பழனி பாரத் பப்ளிக் பள்ளி மாணவர்கள், போதைப்பொருள் தடுப்பு குறித்து சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

நத்தம் அரசு பள்ளி

நத்தம் கோவில்பட்டியில் உள்ள துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கினார். தாசில்தார் சுகந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி தலைமை ஆசிரியர் வீரமணி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சோலை நன்றி கூறினார்.

வேடசந்தூர் அரசு பள்ளி

வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு காந்திராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், பேரூராட்சி தலைவர்கள் மேகலா கார்த்திகேயன் (வேடசந்தூர்), முத்துலட்சுமி கார்த்திகேயன் (எரியோடு), வேடசந்தூர் நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் வருவாய்த்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்றது.


Next Story