விதிமுறைகளை மீறிய 8 கட்டிடங்களுக்கு சீல்


விதிமுறைகளை மீறிய 8 கட்டிடங்களுக்கு சீல்
x

ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 8 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 8 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

மாஸ்டர் பிளான்

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பேரிடர் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, வீட்டுக்கு என்று அனுமதி பெற்று வணிக கட்டிடங்களாக மாற்றக்கூடாது. 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், விதிமுறைகளை மீறி சிலர் கட்டிடங்களை கட்டி வருகின்றனர்.

இவ்வாறு கட்டப்பட்ட கட்டிடங்களை முறையாக கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஊட்டி நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் விதிமுறைகளை மீறி தங்கும் விடுதிகள், வணிக கட்டிங்கள் இருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது.

8 கட்டிடங்களுக்கு சீல்

அதன்பேரில் ஊட்டி தாசில்தார் ராஜசேகர், நகரமைப்பு அலுவலர் ஜெயவேல், கட்டிட ஆய்வாளர் மீனாட்சி மற்றும் பணியாளர்கள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டிட உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் கூறும்போது, ஊட்டி நகராட்சியில் திட்ட ஒப்புதல் வாங்கிய பின்னர், அதற்கு மாறாக கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் தமிழகம் சாலை, கிளப் ரோடு, கூட்ஷெட் ரோடு, ரெட் கிராஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 8 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் 3 கட்டிடங்கள் வீட்டுக்கு அனுமதி பெற்று தங்கும் விடுதிகளாக மாற்றியது தெரியவந்தது. விதிமுறையைமீறிய கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.


Next Story