8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைப்பு


8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைப்பு
x

சேலம் வழியாக செல்லும் 8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் சூரமங்கலம் ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கி வருகிறது. அந்த வகையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனூர் வழியாக செல்லும் 8 ரெயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டியை கூடுதலாக இணைத்து நிரந்தரமாக இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி மங்களூரு சென்டிரல்-சென்னை சென்டிரல் (வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண்-22638) நேற்று முதல் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்பட்டது. சென்னை சென்டிரல்-மங்களூரு சென்டிரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-22637) நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதலும், சென்னை சென்டிரல்-மங்களூரு சென்டிரல் ரெயிலில் (வண்டி எண்-12601) இன்று (வியாழக்கிழமை) முதலும், மங்களூரு சென்டிரல்-சென்னை சென்டிரல் ரெயிலில் (வண்டி எண்-12602) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.

திருவனந்தபுரம்- ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-22641) இன்று முதலும், ஷாலிமர்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-22642) வருகிற 5-ந் தேதி முதலும், கன்னியாகுமரி-ஸ்ரீ மத்தா வைஷ்ண தேவி காத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-16317) நாளை முதலும், ஸ்ரீ மத்தா வைஷ்ண தேவி காத்ரா-கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-16318) வருகிற 6-ந் தேதி முதல் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளன.

இந்த தகவலை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story