நூலகங்களுக்கு நூல்கள் வாங்க தேர்வுக்குழு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நூலகங்களுக்கு நூல்கள் வாங்க தேர்வுக்குழு ஏற்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் 'கலைஞர் 100' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 'கலைஞர் 100' நூலை வெளியிட்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட முதல் பிரதியை மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். கருணாநிதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது முதல் 2019 வரை வெளியான கட்டுரை தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நூலகங்களுக்கு நூல்கள் வாங்க நிபுணர்கள் அடங்கிய தேர்வுக்குழு ஏற்படுத்தப்படும். ஒளிவு மறைவின்றி நூலகங்களுக்கு நூல்கள் வாங்கப்படும். கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு அண்மையில் 3.50 லட்சம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.
ஒரு ஆட்சி செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்களைப் பற்றி பத்திரிகையாளர்கள் மனப்பூர்வமாக ஆதரித்து எழுத வேண்டும். அப்படி எழுதினால் தான் நீங்கள் விமர்சிக்கும் போதும் அதற்கு உண்மையான மதிப்பும், மரியாதையும் இருக்கும்.
சரியானவற்றை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் அதனை சுட்டிக்காட்டுவதும் தான் நடுநிலை பத்திரிகைக்கு இருக்கக்கூடிய தர்மம். அதன்படி தமிழ்நாட்டு பத்திரிகைகள் நடந்துக்கொள்ள வேண்டும் என மிகுந்த பணிவோடு நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.