தஞ்சை மூலை அனுமாருக்கு கரும்புகளால் சிறப்பு அலங்காரம்


தஞ்சை மூலை அனுமாருக்கு கரும்புகளால் சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:47 PM GMT)

தஞ்சை மூலை அனுமாருக்கு கரும்புகளால் சிறப்பு அலங்காரம் இன்று நடக்கிறது.

தஞ்சாவூர்

தஞ்சை மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோவிலில் அனுமாருக்கு இன்று பொங்கல் சிறப்பு வழிபாடு மற்றும் கரும்புகளால் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

மூலை அனுமார் கோவில்

தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 திருக்கோவில்களுள் ஒன்றாகும். மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். சனி தோஷம் உள்ளிட்ட நவக்கிரகங்கள் தோஷங்கள் மற்றும் வாஸ்து தோஷங்கள் போக்கும் தலம் ஆகும்.

சத்குரு தியாகராஜ சுவாமிகள் மற்றும் சேதுபாவா சுவாமிகள் வழிப்பட்ட தலம் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அனுமன் தனது கல்வியை சூரிய பகவானிடம் இருந்து கற்றார்.சூரியனிடம் இருந்து வியாகரணம் கற்று தேர்ந்தார். ஆண்டு தோறும் பொங்கல் அன்று சூரியனுக்கு அனுமன் நன்றி தெரிவிப்பதாக ஐதீகம்.

சிறப்பு வழிபாடு

இதனை முன்னிட்டு மூலை அனுமார் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. 8 மணிக்கு மூலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது.காலை 10 மணிக்கு பொங்கலை முன்னிட்டு மூலை அனுமாருக்கு கரும்புகளால் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.மாலை 6மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. கரும்பு அலங்காரத்தில் மூலை அனுமாரை தரிசனம் செய்தால் இன்பமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகிறார்கள்.


Next Story