ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 2 Jan 2023 6:45 PM GMT (Updated: 2 Jan 2023 6:45 PM GMT)

தியாகதுருகம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

சீனிவாச பெருமாள்

வைகுண்டு ஏகாதசியையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் பரமபதவாசல் என்கிற சொர்க்கவாசல் திறப்பு நிகழச்சி நடைபெற்றது. அந்த வகையில் தியாகதுருகம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திருமஞ்சனம், சிறப்பு ஆராதனையும், அதைத் தொடர்ந்து 5.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூலவர் ஸ்ரீனிவாசபெருமாள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உற்சவ மூர்த்தி வீதி உலா

உற்சவ மூர்த்தி கருட வாகனத்தில் பஜனை குழுவினருடன் தியாகதுருகம் கடைவீதி, வைசியர் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக புறப்பாடு நடைபெற்றது. இதில் சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்திபிள்ளை, நிர்வாகிகள் மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், நகரசெயலாளர் மலையரசன், துளுவ வேளாளர் சங்க நிர்வாகி பழனிவேல், ஆரிய வைசியர் சங்க நிர்வாகி அபரஞ்சி, நாயுடுமார்கள் சங்க நிர்வாகி கோமதுரை, தியாகதுருகம் ஒன்றியக்குழு துணைதலைவர் நெடுஞ்செழியன், முன்னாள் எம்.எல்.ஏ.கோமுகிமணியன், பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர், துளுவவேளாளர் சங்க முன்னாள் தலைவர் வேல்முருகன், அ.தி.மு.க. நகர துணைசெயலாளர் கிருஷ்ணராஜ், ஜெயலலிதா பேரவை செயலாளர் வேல்நம்பி, புக்குளம்.முரளிபாபு, தியாகதுருகம் தமிழ்ச்சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. பொதுக்குழு உறுப்பினர் பச்சையாப் பிள்ளை மற்றும் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story