பழைய இரும்புக்கடையில் இருந்த உலோகத்தாலான அம்மன் சிலை


பழைய இரும்புக்கடையில் இருந்த உலோகத்தாலான அம்மன் சிலை
x

உடுமலை அருகே பழைய இரும்புக்கடையில் இருந்த உலோகத்தாலான அம்மன் சிலையை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்

உடுமலை அருகே பழைய இரும்புக்கடையில் இருந்த உலோகத்தாலான அம்மன் சிலையை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழைய இரும்புக்கடை

திருப்பூர் மாவட்டம்உடுமலை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் ஷெரிப் என்பவர் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவருடைய கடையில் உலோகத்தால் ஆன அம்மன் சிலை ஓன்று இருப்பதாக கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி எழிலரசனுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவர் தனது உதவியாளர் சித்ராவுடன் அந்த கடைக்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது அங்கு அம்மன் சிலை இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து உடுமலை தாசில்தாருக்கு அவர் தகவல் கொடுத்தார். அவருடைய அறிவுரையின்படி உடுமலை போலீஸ் நிலையத்தில் எழிலரசன் புகார் தெரிவித்தார்.

உடனடியாக ஷெரிப் நடத்தி வரும் அந்த பழைய இரும்புக்கடைக்குச் சென்ற போலீசார் அங்கிருந்த உலோகத்தாலான அம்மன் சிலையைக் கைப்பற்றினர். அந்த சிலை 37 செ.மீ. உயரமும் 4½ கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

கோவிலில் திருடப்பட்டதா?

பழங்கால சிலை போல தோற்றமளிக்கும் அதன் தொன்மை மற்றும் அது எந்த உலோகத்தினால் செய்யப்பட்டது என்று தெரியவில்லை. மேலும் அந்த சிலை ஏதேனும் கோவிலில் திருடப்பட்டதா, வீட்டில் வைத்து வழிபாடு செய்யப்பட்டதா, பழைய இரும்புக்கடைக்கு வந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த சிலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே அது பழமையான சிலையா, விலை உயர்ந்த உலோகத்தால் செய்யப்பட்டதா என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பழைய இரும்புக்கடையில் கிடைத்த அம்மன் சிலையால் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story