துப்பட்டாவால் கழுத்தை நெரித்து காதல் மனைவி கொலை


துப்பட்டாவால் கழுத்தை நெரித்து   காதல் மனைவி கொலை
x

ஆம்பூா் அருகே துப்பட் டாவால் கழுத்தை நெரித்து காதலித்து திருமணம் செய்த மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூா் அருகே துப்பட் டாவால் கழுத்தை நெரித்து காதலித்து திருமணம் செய்த மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

காதல் திருமணம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் நந்தினி (வயது 27). இவரும், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த பங்காளமேடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (31) என்பவரும் 'ஷூ' கம்பெனியில் வேலை செய்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நந்தினி தனது கணவர் மற்றும் மகன்களுடன் தேவலாபுரத்தில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள தாய் வீட்டிற்கு வந்தனர். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்களை குடும்பத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

கழுத்தை நெரித்து கொலை

அதைத் தொடர்ந்து நேற்று காலை குடும்பத்தினர் அருகே உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது கணவன்-மனைவி மட்டும் வீட்டில் இருந்தனர். அந்த சமயத்தில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், நந்தினி அணிந்திருந்த துப்பட்டாவை பறித்து அவரது கழுத்தை இறுக்கி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது நந்தினி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள், விக்னேஷை சரமாரியாக தாக்கினர்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி மற்றும் போலீசார் நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயம் அடைந்த விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நந்தினியின் தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story