சியட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் குரல் கொடுக்கவில்லை அமைச்சர் பொன்முடி பேச்சு


சியட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் குரல் கொடுக்கவில்லை  அமைச்சர் பொன்முடி பேச்சு
x

சியட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் குரல் கொடுக்கவில்லை என்று விழுப்புரம் அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2019-2020-ம் ஆண்டு படித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு 1,500 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூரில் அரசு கலைக்கல்லூரியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் இயங்கி வந்தது. அப்போதெல்லாம் கள்ளக்குறிச்சியில் இருந்தும் கடலூர், சிதம்பரம் சென்று படித்தனர். 1968-ம் ஆண்டு விழுப்புரத்தில் அரசு கலைக்கல்லூரி திறக்கப்பட்டது. நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தேன். அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட இக்கல்லூரி பின்னர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

சியட் தேர்வு

தற்போது படிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு பின் அண்ணாமலை பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெறுவீர்கள். இக்கல்லூரியில் நான் பணியாற்றும் காலத்தில் ஆங்கில வழிக்கல்விதான். அதன்பின் தமிழ்வழி கல்வியும், ஷிப்ட் முறையையும் கொண்டு வந்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். ஆரம்ப கல்வியை கொண்டு வந்தது காமராஜர் அரசாக இருந்தாலும், 3 கிலோமீட்டருக்கு ஒரு பள்ளி, 5 கிலோ மீட்டருக்குள் 8-ம் வகுப்பு வரை ஒரு பள்ளி என்று விரிவுபடுத்தியது கருணாநிதி தலைமையிலான அரசுதான்.

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் குரல் கொடுத்து இருக்க வேண்டும். அது மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கானது என்றே வைத்துக்கொள்வோம். தற்போது சியட் தேர்வு எழுதினால்தான் உயர்கல்வி பயில முடியும் என்ற நிலையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்திருக்க வேண்டாமா?. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., வேலூர் மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் காவேரியம்மாள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story