மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி ஒத்திகை


மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி ஒத்திகை
x
தினத்தந்தி 23 Jan 2023 6:45 PM GMT (Updated: 23 Jan 2023 6:46 PM GMT)

குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

குடியரசு தின விழா

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதே போல குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது. விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் திறந்த ஜீப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். விழாவில் மாவட்ட உயர் அதிகாரிகள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

குடியரசு தின விழாவையொட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தை தயார் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக மும்முரமாக நடந்தது. அங்கு புற்கள் வெட்டப்பட்டு சிறு சிறு மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

கலைநிகழ்ச்சி ஒத்திகை

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் போலீசாரின் கம்பீரமான அணிவகுப்பு இடம்பெறுவது வழக்கம். இந்த அணிவகுப்புக்காக போலீசார் விழா நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே பயிற்சியில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. விழாவில் நடைபெறுவது போலவே இந்த ஒத்திகை தத்ரூபமாக நடந்தது.

இதே போல ஆண்டுதோறும் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடக்கும். இந்தநிலையில் மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி ஒத்திகையானது நாகர்கோவில் டதி பெண்கள் பள்ளியில் நேற்று நடந்தது.

1,200 போலீசார் பாதுகாப்பு

இதற்கிடையே குடியரசு தின விழாவையொட்டி ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கடலோர பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கடலில் ஏதேனும் மர்மப் படகு தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்கும்படி கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களிடம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாட்ஜூகளிலும் சோதனை நடைபெறுகிறது. ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் மற்றும் களியக்காவிளை உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story