பொங்கலுக்கு செங்கரும்பு விளைச்சல் அமோகம்


பொங்கலுக்கு செங்கரும்பு விளைச்சல் அமோகம்
x

பொங்கல் சிறப்பு தொகுப்பில் செங்கரும்பு சேர்க்கப்படாதது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நிலப்பரப்பில் செங்கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அரியலூர்

செங்கரும்பு

அரியலூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்வதற்காக விவசாயிகள் செங்கரும்பு பயிரிடுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழர்களின் கலாசார பண்டிகையான பொங்கல் திருநாளுக்கு விற்பனை செய்வதற்காக அரியலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் செங்கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கரும்பு அறுவடைக்கும் இன்னும் ஒரு சில நாட்களில் தயாராகிவிடும். இந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் போதுமான அளவு மழைப்பொழிவு இல்லாத நிலையிலும் விவசாயிகள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு நல்லநிலையில் கரும்பை வளர்த்துள்ளனர்.

அணில், நரி, எலி மற்றும் கரும்பைத் தாக்கும் பூச்சி தாக்குதலில் இருந்து கரும்பு உற்பத்தி பாதிப்படையாமல் மிகுந்த கவனத்துடன் பராமரித்து வளர்த்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 5 ஆண்டுகளாக செங்கரும்பு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில் தவறாமல் இடம்பெற்று வந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த உற்சாகத்துடன் செங்கரும்பு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

பெருத்த ஏமாற்றம்

கடந்த ஆண்டு செங்கரும்பு கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்போடு இணைத்து வழங்கினர். அதனால் விவசாயிகள் கடந்த ஆண்டு பொங்கலுக்கு கரும்பு பயிரிட்ட அளவைவிட இந்த ஆண்டு சற்று கூடுதல் நிலப்பரப்பில் செங்கரும்பு உற்பத்தி செய்துள்ளனர். கடுமையான போராட்டத்திற்கு பிறகு நல்லநிலையில் வளர்ந்துள்ள செங்கரும்பு நிச்சயமாக அரசால் கொள்முதல் செய்யப்படும் என்று காத்திருந்தனர்.

இந்நிலையில் பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் வழங்க அரசால் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரியலூர் மாவட்டம் முழுவதும் செங்கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் செங்கரும்பு உற்பத்தி செய்து இடைத்தரகர்களை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கூலி கேட்பார்கள் போலிருக்கிறது

இதனால் அரசு நல்ல விலைக்கு கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்த்து இருந்த விவசாயிகள் உற்பத்தி செய்த கரும்பு முழுமையாக விற்பனை ஆகுமா?, அப்படியே ஆனாலும் கரும்புக்கு எதிர்பார்த்த விலை கிடைக்குமா? என்பது குறித்து பெருத்த அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள், பொதுமக்கள் கூறியதாவது:-

தா.பழூரை சேர்ந்த விவசாயி அன்பழகன்:- கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரை ஏக்கர் கூடுதலாக செங்கரும்பு உற்பத்தி செய்துள்ளேன். கரும்பு நன்கு வளர்ந்து வந்துள்ளன. ஆனால் அரசு கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்த்து இருந்தநிலையில் கரும்பை பற்றிய அறிவிப்பு தெரிவிக்கப்படாதது ஏமாற்றமாக உள்ளது. எங்களிடம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்து எங்கள் குடும்பத்திற்கு இந்த பொங்கல் திருநாளை இனிமையான பொங்கல் திருநாளாக கொண்டாட அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

சிலால் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராணி:- எங்கள் வயலில் கரும்பு நல்ல அளவில் உற்பத்தியாகி உள்ளது. ஆனால் அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் ரேஷன் கார்டுதாரகளுக்கு இந்த ஆண்டு கரும்பு கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். மொத்த வியாபாரிகள் எங்களிடமிருந்து கரும்பு வாங்கி சென்று விற்பனை செய்வார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கரும்பு வாங்கி சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. குழந்தைகள் கரும்பு தின்ன கூலி கேட்பார்கள் போலிருக்கிறது. கூட்டுக்குடும்ப அமைப்பு மீண்டும் உருவானால் தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரக்கூடிய செங்கரும்பு சாப்பிடும் பழக்கம் குழந்தைகளுக்கு வர வாய்ப்பு உள்ளது.

பழமைக்கு திரும்ப வேண்டிய அவசியம்

குடும்ப தலைவர் சாமிநாதன்:- சுமார் 20, 25 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் உள்ளவர்கள் பணி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசித்து வந்தாலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் அவர்களுடைய சொந்த கிராமங்களில் கூட்டுக் குடும்பமாக ஒன்றிணைவார்கள். குடும்பத்திற்கு 2 அல்லது 3 பிள்ளைகள் இருந்த காலம் போய் இப்போது ஒரு குடும்பத்திற்கு ஒரு பிள்ளை தான் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாரம்பரியமாக கலாசார ரீதியாக நமது ஆரோக்கியத்திற்கு பயன் தரக்கூடிய வகையில் இருந்த பல்வேறு உணவு பழக்க வழக்கங்கள் இன்று குழந்தைகளிடம் இல்லாமல் போய்விட்டது. அதுபோல் கிராமப்புறங்களில் பிறந்து வளரும் பிள்ளைகள் கூட குடும்பத்தோடு அமர்ந்து கரும்பு சாப்பிடும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. மீண்டும் இது போன்ற சில காரணங்களால் கிராமம், நகரம் என்கிற வித்தியாசம் இல்லாமல் மக்கள் பழமைக்கு திரும்ப வேண்டிய அவசியம் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story