செல்போன் கோபுரத்தில் ஏறி ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை மிரட்டல்


செல்போன் கோபுரத்தில் ஏறி ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:45 PM GMT)

கிருஷ்ணகிரியில் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஆயுதப்படை போலீஸ்காரர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர் கீழே இறங்கினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஆயுதப்படை போலீஸ்காரர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர் கீழே இறங்கினார்.

தற்கொலை மிரட்டல்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் மணிவேல் (வயது 33). இவர் நேற்று காலை 8.30 மணி அளவில் ஆயுதப்படை மைதானம் அருகில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார். 150 அடி உயரத்தில் இருந்தவாறு அவர் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார்.

இதை அந்த வழியாக சென்ற போலீசார், பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அதேபோல தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் மணிவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது:-

9 போலீசார் இடமாற்றம்

கடந்த 9-ந் தேதி நான் உள்பட மொத்தம் 9 ஆயுதப்படை போலீசார் திடீரென்று கோவை சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்கள். நான் இடமாறுதல் கேட்டு எந்தவித விருப்ப மனுவும் கொடுக்காத நிலையில் எனக்கு இடமாறுதல் வழங்கி உள்ளதாக கூறினார்கள்.

இது தொடர்பாக நாங்கள் அனைவரும் 13-ந் தேதி கோவையில் ஐ.ஜி.யை சந்தித்து முறையிட்டோம். நீங்கள் என்ன தவறு செய்தீர்கள். நீங்கள் தவறு செய்யாமல் உங்கள் போலீஸ் சூப்பிரண்டு எதற்காக உங்களை இடமாற்றம் செய்ய சொல்கிறார். உங்கள் மாவட்டத்தில் 1,400 போலீசார் உள்ளனர். உங்களை மட்டும் எதற்காக இடமாற்றம் செய்ய சொல்கிறார் என ஐ.ஜி. கேட்டார்.

அழுத்தம் கொடுக்கிறார்கள்

பின்னர் போலீஸ் சூப்பிரண்டை பார்க்குமாறு ஐ.ஜி. கூறினார். அதன் பிறகு நாங்கள் போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு கொடுத்தோம். அவரும் எங்களை வேலை பார்க்க சொன்னார். இந்த நிலையில் உங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதே. நீங்கள் ஏன் இன்னும் இங்கு வேலை பார்க்கிறீர்கள். கோவை சரகத்திற்கு செல்லுங்கள் என்று எங்களின் ஆயுதப்படை பிரிவு உயர் அதிகாரிகள் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து தான் இங்கு வந்துள்ளோம். எங்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தும் விதமாக இப்படி எங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

இதைத் தொடர்ந்து அவரிடம் பேசிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, உங்களின் பிரச்சினை தொடர்பாக பேசி தீர்வு காணப்படும். கீழே வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு 11.30 மணிக்கு போலீஸ்காரர் மணிவேல் கீழே இறங்கி வந்தார். அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரியில் பணி இடமாற்றத்தை கண்டித்து ஆயுதப்படை போலீஸ்காரர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story