கோவில் அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
ராமநாதபுரம் மாவட்டம் பனைவயல் கிராமத்தை சேர்ந்த கலைராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பனைவயல் கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தின் தண்ணீர் தேவையை இங்குள்ள அத்தாணி கண்மாய்தான் பூர்த்தி செய்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த கண்மாய் அருகில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதனால் இந்த கண்மாய் பகுதியில், காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
அதே பகுதியில் தற்போது புதிதாக 2 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கு அருகிலேயே முனீஸ்வரர் கோவில், சோனையம்மன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. தற்போதும் டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி பாட்டில்களும், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளும் வீசப்படுகின்றன. இதனால் கிராம மக்களும், விவசாயிகளும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட இடத்தை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சம்பந்தப்பட்ட இடத்தில் ஒரு டாஸ்மாக் கடை கோவிலின் அருகில் 55 அடி தூரத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையை அங்கிருந்து அகற்றும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.