அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி


அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
x

ஆரணி அருகே நிச்சயதார்த்தத்துக்கு தகவல் தெரிவிக்க சென்ற வாலிபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே நிச்சயதார்த்தத்துக்கு தகவல் தெரிவிக்க சென்ற வாலிபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக இறந்தார்.

நிச்சயதார்த்தம்

ஆரணி சைதாப்பேட்டை நாடகசாலை பேட்டை தெருவை சேர்ந்தவர் பெருமாள், நெசவுத் தொழிலாளி. இவரது மகன் குகனேஸ்வரன் (வயது 29). இவர் பாலிடெக்னிக் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு தந்தையுடன் பட்டு நெசவு சேலை தயாரிப்பு பணி மற்றும் அடகு கடை நடத்தி வந்தார்.

இவருக்கு இன்று மாலை உறவினர் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து அவர் தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிப்பதற்காக நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் சென்றார்.

வாகனம் மோதி பலி

ஆரணி சேவூர் பைபாஸ் சாலையில் ராட்டினமங்கலம் கூட்ரோடு அருகே செல்லும் போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் குகனேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

இதையறிந்த குகனேஸ்வரனின் நண்பர்கள் அவரது குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

மேலும் தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெருமாள் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனம் எது என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மாலையில் நிச்சயதார்த்தத்துக்கு வர வேண்டிய உறவினர்கள் காலையில் மணமகன் இறந்த கோலத்தை பார்க்க வந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story