பெண் விவகாரத்தில் பயங்கரம்: கட்டிட காண்டிராக்டர் கடத்தி படுகொலை


பெண் விவகாரத்தில் பயங்கரம்: கட்டிட காண்டிராக்டர் கடத்தி படுகொலை
x

பெண் விவகாரத்தில் கட்டிட காண்டிராக்டர் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் குளக்கரையில் வீசப்பட்டு கிடந்தது.

நெல்லை,

நெல்லை பழையபேட்டையை அடுத்த அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்தராஜ் (வயது 63), கட்டிட காண்டிராக்டர். இவருக்கு வின்சென்ட் ராஜ் என்ற மகனும், ஜான்சி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

கடந்த 22-ந்தேதி காலை 9 மணியளவில் ஜேக்கப் ஆனந்தராஜ் நெல்லை டவுன் பகுதியில் நடக்கும் கட்டிட பணியை பார்ப்பதற்காக காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து 11 மணியளவில் அவர் கிளம்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதையடுத்து அவரது செல்போனுக்கு மனைவி அன்னம்மாள் தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச்-ஆப்' செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் அவரை பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மகள் ஜான்சி தனது தந்தையை காணவில்லை என்று டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேக்கப் ஆனந்தராஜை தேடி வந்தனர்.

அழுகிய நிலையில் பிணம்

நெல்லை டவுன், பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஜேக்கப் ஆனந்தராஜின் கார் சுத்தமல்லி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் புணை வெங்கப்பன் குளத்தின் கரையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக, அந்த வழியாக சென்றவர்கள் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கடத்தி கொலை

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தது ஜேக்கப் ஆனந்தராஜ் என்பதும், அவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பெண் விவகாரத்தில் ஜேக்கப் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story