எல்.இ.டி. பல்பை விழுங்கிய குழந்தைக்கு எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை


எல்.இ.டி. பல்பை விழுங்கிய குழந்தைக்கு எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x

சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில், பல்பு விழுங்கிய ஒன்றரை வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை

சென்னை கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ். சாலையில் வசிப்பவர் விக்னேஷ். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1½ வயதில் பூவேந்திரன் என்னும் ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக சிறிய ரக எல்.இ.டி பல்பை விழுங்கிவிட்டது. இதனால் குழந்தைக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தைக்கு உடனடியாக டாக்டர்கள் சிகிச்சையளிக்க தொடங்கினர்.

இதுகுறித்து குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவிக்கையில், 'குழந்தையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தற்போது வரை குழந்தை சீரான உடல் நிலையில் உள்ளது. குழந்தைக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்டதில் எல்.இ.டி பல்பு தற்போது வயிற்று பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என கூறினார்.


Next Story