போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தொழிலாளி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் -சீமான் வலியுறுத்தல்


போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தொழிலாளி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் -சீமான் வலியுறுத்தல்
x

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தொழிலாளி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும்: சீமான் வலியுறுத்தல்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டி காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. அவரது மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தங்கப்பாண்டியின் உடலில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையான காயங்கள் இருந்ததை உடற்கூராய்வு உறுதிப்படுத்தியிருப்பது காவல்துறையினரால் தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு 6 நாட்களாகியும், இதுவரை விசாரணையைத் தொடங்காதது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.

எனவே சி.பி.சி.ஐ.டி. விசாரணையை விரைவுபடுத்தி, எவ்வித அதிகார குறுக்கீடுமற்ற நியாயமான நீதி விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமான அனைவருக்கும் சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும். தங்கபாண்டி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.50 லட்சம் துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story