'வாக்கு வங்கி இல்லாதோரின் வாழ்க்கைக்கும் உதவுவதுதான் தி.மு.க. அரசு' -முதல்-அமைச்சர் பேச்சு


வாக்கு வங்கி இல்லாதோரின் வாழ்க்கைக்கும் உதவுவதுதான் தி.மு.க. அரசு -முதல்-அமைச்சர் பேச்சு
x

‘வாக்கு வங்கி இல்லாதோரின் வாழ்க்கைக்கும் உதவி செய்யும் அரசு தான் தி.மு.க. விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்வதே திராவிட மாடல்’, என்று புதுக்கோட்டையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழக அரசின் செயல்பாடு

ஒரு காலத்தில் திருச்சி மாவட்டத்தோடு இருந்த புதுக்கோட்டையை, 1974-ம் ஆண்டு பிரித்து, புதுக்கோட்டையை தனி மாவட்டமாக ஆக்கியவர் கருணாநிதி. இன்றைக்கு புதுக்கோட்டையில் உள்ள 6 தொகுதிகளில், 5 தொகுதிகளை மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வென்று, இந்த அரசின் கோட்டையாக இந்த புதுக்கோட்டை மாறியிருக்கிறது. 5 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், இந்த மாவட்டத்தில் உள்ள தொகுதி மக்களுக்காக, ஏன், இந்த மாநிலத்தில் உள்ள 234 தொகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, பாடுபட்டு வரக்கூடிய அரசின் முதல்-அமைச்சராக நான் இங்கு வந்திருக்கிறேன்.

மாநிலம் முழுமைக்கும் என்ன தேவை? ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன தேவை? ஒவ்வொரு தனிமனிதனின் தேவையும் என்ன? என்பதை பார்த்துப் பார்த்துச் செய்யக்கூடிய அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை கல்வியில், வேலைவாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், உள்கட்டமைப்பில் சிறப்புற வளர்த்தவர் கருணாநிதி. இவை அனைத்தையும் விஞ்சியதாக சாமானியர் வாழ்க்கையை பற்றியே கருணாநிதி நினைத்தார். இந்த அடிப்படையில்தான், இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

குரலற்றவர்களின் குரலாக...

ஏழை எளிய மக்களில் எத்தனை பேரின் வாழ்க்கைத் தரம் இந்த ஆட்சியால் உயர்ந்தது? என்பதை இந்த ஆட்சியின் சாதனையாக இருக்க வேண்டும். ஏழை- எளிய விளிம்பு நிலை மக்கள் தங்கள் கோரிக்கைக்காக அரசாங்கத்தை சுலபமாக அணுகும் வகையில் அரசு எந்திரம் செயல்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினரின் சமூக வாழ்க்கை எவ்வளவு மேன்மை அடைந்திருக்கிறதோ, அதனையே நான் சாதனையாக நினைக்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், இருளர்கள், நரிக்குறவர்கள் போன்ற சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் விளிம்பு நிலை மக்களின் அரசாக இது செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்ற குரலற்றவர்களின் குரலாக இந்த அரசு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இத்தகைய மக்களுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்து தர வேண்டும், சிந்தித்துச் சிந்தித்து நிறைவேற்றித் தர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். வளர்ச்சி என்ற பாதையை 'டெவலப்மெண்ட்' என்ற பொதுவான அர்த்தத்தில் சொல்லவில்லை. மாற்றம், மேன்மை, உள்ளார்ந்த மலர்ச்சி என்ற பண்பாட்டு அடையாளத்துடன் நாங்கள் சொல்கிறோம்.

'திராவிட மாடல்' ஆட்சி

ஒரு தொழிற்சாலை உருவாவது வளர்ச்சி. அந்தத் தொழிற்சாலை வருவதன் மூலமாக அந்த வட்டாரம் அடையக்கூடிய பயன், அந்த வட்டாரத்தை அடையக்கூடிய வேலைவாய்ப்புகள், அதன் மூலமாக அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் அடையக்கூடிய உயரம், சமூகத்தில் ஏற்படும் மாற்றம் ஆகிய அனைத்தையும் சேர்த்துத்தான் வளர்ச்சி என்று சொல்கிறோம். அத்தகைய வளர்ச்சியை உருவாக்க நாங்கள் நினைக்கிறோம். இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல்.

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், அதிகாரத்துக்கு வந்தாக வேண்டும் என்பதை உணர்ந்ததால், தேர்தலில் குதித்த இயக்கம் தி.மு.க.

மக்கள்தான் எங்களுக்கு முக்கியமே தவிர, இப்படிப்பட்ட பதவிகள் அல்ல. எத்தகைய திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதனை வாக்கு வாங்கக்கூடிய தந்திரம் என்று கொச்சைப்படுத்துபவர்கள் சிலர் இருக்கிறார்கள். வாக்குகளை வாங்குவதற்காகத்தான் இதை எல்லாம் நிறைவேற்றுகிறோம் என்று குற்றம் சாட்டக்கூடியவர்கள், விமர்சனம் செய்யக்கூடியவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இருளர்களுக்கோ, குறவர்களுக்கோ, மாற்றுத்திறனாளிகளுக்கோ, திருநங்கைகளுக்கோ அவர்களுக்கு வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறதா? அவர்கள் வாக்கு வங்கி உள்ளவர்களா? இப்படி வாக்கு வங்கி இல்லாதவர்களது வாழ்க்கைக்கும், அவர்களது சேவைக்கும் உதவிகளைச் செய்யும் அரசு தான் தி.மு.க. எங்கள் அரசின் நோக்கம் சிந்தனை, செயல் ஆகிய அனைத்தும் மக்கள் நலன்தான், சாதாரண மக்களின் நலன்தான், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்தான்.

மக்களின் அரசு

பெரியார், அண்ணா வழியில் சமூகநீதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட கருணாநிதி, எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ, அந்த மக்களின் அரசுதான் இன்று கோட்டையில் நடக்கிறது. அந்த மக்களுக்கான அரசையே தொடர்ந்து நடத்துவோம் என்பதை நான் இங்கு உங்கள் முன்னால் நின்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் இங்கேயும் குறிப்பிட விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story