நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்ய 104 குளங்களை உருவாக்க இலக்கு- கலெக்டர் மோகன்


நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்ய 104 குளங்களை உருவாக்க இலக்கு- கலெக்டர் மோகன்
x

நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்ய விழுப்புரம் மாவட்டத்தில் 104 குளங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மோகன் கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் அமிர்த சரோவர், ஜல்சக்தி அபியான் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தல், குளம், குட்டைகளை சீரமைத்தல், ஆழ்துளை கிணறுகளை சரிபார்த்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

104 குளங்கள் உருவாக்க இலக்கு

கிராமப்புறங்கள் மட்டுமல்லாமல் நகராட்சி, பேரூராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். தாழ்வான பகுதியை தேர்வு செய்து புதிய குளங்களை அமைப்பதன் மூலம் அதிகளவில் நீரை விரைவில் சேகரித்து வைத்திட முடியும் என்பதால் தாழ்வான பகுதிகளாக தேர்ந்தெடுத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 8 குளங்கள் என 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மொத்தம் 104 குளங்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உரிய இடங்களை தேர்வு செய்து குளங்கள் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு புதிய குளங்களை உருவாக்க முடியாத சூழ்நிலை இருப்பின் அப்பகுதியில் முறையாக பராமரிக்கப்படாத குளங்களை கண்டறிந்து அவற்றை சீரமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் வெண்ணிலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story