தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்


தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்
x

வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தமிழகத்திற்கான பா.ஜ.க. மேலிட இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

விருதுநகர்


வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தமிழகத்திற்கான பா.ஜ.க. மேலிட இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பு

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து தரப்பினருக்குமான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நாங்கள் மக்களிடம் இதை தெரிவிக்கும் வகையில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் நடத்தி வருகிறோம். வர இருக்கின்ற நாடாளு மன்ற தேர்தலில் தொடர்ந்து பிரதமர் மோடி நீடிக்க ஆதரவு தருமாறு கேட்டு வருகிறோம். தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்கு வங்கிக்காக பல்வேறு தகவல்களை சொல்லி வருகிறார். நாங்களும் வாக்கு வங்கிக்காக தான் பேசி வருகிறோம். ஆனால் செய்த சாதனைகளை சொல்லி ஆதரவு கேட்கிறோம்.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி

மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல.

விருதுநகர் மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக உருவாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும். விருதுநகர் அருகே பட்டம் புதூரில் அறிவிக்கப்படட ஜவுளி பூங்கா திட்டமும் நடைமுறைக்கு வரும்.

சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். தமிழகத்தை பொறுத்தமட்டில் அமித்ஷா அறிவித்தபடி வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க. தலைமைக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை.

அமலாக்கத்துறை

சி.பி.ஐ. அமலாக்கத்துறை என்பது சுதந்திரமான விசாரணை அமைப்புகள். இதில் மத்திய அரசுக்கும், பா.ஜ.க.விற்கும் எந்த பங்கும் இல்லை. ராகுல் காந்தி வெளிநாடுகளில் சென்று இந்தியாவை பற்றி விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல. விருதுநகர் மாவட்டத்தில் போதை பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முன்னதாக பா.ஜ.க. நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் அவரது உருவப்படத்திற்கு பா.ஜ.க. தேசிய மேலிட இணைப்பாவையாளர் சுதாகர் ரெட்டி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


Next Story