அக்னிபத் திட்டத்தை கைவிடவேண்டும்; ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்


அக்னிபத் திட்டத்தை கைவிடவேண்டும்; ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
x

அக்னிபத் திட்டத்தை கைவிடவேண்டும் என்று ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

ம.தி.மு.க.வில் உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அண்ணா பிறந்த நாள்

* செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் விழாவை ம.தி.மு.க. கொடியேற்றியும், அண்ணா உருவப் படத்துக்கு புகழ் வணக்கம் செலுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்..

* ஜனாதிபதி தேர்தலில், நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க யஷ்வந்த் சின்காவுக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிப்பதுடன், அவரது வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

* ஜூலை 7-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும்.

கண்டனம்

* காவிப் படையாக இந்திய ராணுவத்தை மாற்றும் முயற்சிக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்துகிறது.

* கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. மேலும், கூடங்குளத்தில் அமையும் 3-வது மற்றும் 4-வது அலகு அணு உலைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

* ம.தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி சார்பில், கட்சியின் கொள்கை விளக்க பயிற்சி பாசறை கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்துவது என்று இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story