அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்


அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்
x

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களும் பயனடையும் வகையில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆட்சி கட்டிலில் அமர்ந்த தி.மு.க. அரசு, ஓராண்டாகியும் அது குறித்து வாய் திறக்கவில்லை. மாறாக, 31-05-2022 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு எவ்வித ஓய்வூதிய பயன்களையும் அளிக்காமல் அவர்களை வெறும் கையுடன் வீட்டிற்கு தி.மு.க. அரசு அனுப்பிவைத்துள்ளது.

கும்பகோணம் பணிமனையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி, பலருக்கு உதவி புரிந்து, உதவி மேலாளராக 31-05-2022 அன்று ஓய்வு பெற்ற ரமேஷ் என்பவர் ஓய்வு பெற்ற நாளன்று வெறும் கையுடன் வீடு சென்ற நிலையில், 01-06-2022 அன்று மன உளைச்சல் காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்வதோடு, கருணை அடிப்படையில் இவருடைய குடும்பத்திற்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை முதலில் வழங்குமாறு தி.மு.க. அரசை கேட்டுக்கொள்கிறேன்.

நடவடிக்கை

ஓய்வூதிய பலன்கள் மூலம் தன் மகன் அல்லது மகளுக்கு திருமணத்தை நடத்தலாம் என்றும், உயர்கல்வி படிக்க வைக்கலாம் என்றும், ஏற்கனவே வாங்கிய வீட்டு கடனை அடைக்கலாம் என்றும் நினைத்துக்கொண்டிருந்த ஓய்வு பெற்றவர்களை வெறும் கையுடன் அரசு போக்குவரத்து கழகங்கள் அனுப்பிவைத்தது அவர்கள் மேல் இடி விழுந்தது போல் உள்ளது.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story