முன்விரோத தாக்குதலில் காயம் அடைந்த தம்பி சாவு


முன்விரோத தாக்குதலில் காயம் அடைந்த தம்பி சாவு
x

முன்விரோத தாக்குதலில் காயம் அடைந்த தம்பி உயிரிழந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர்களுக்கு ராமச்சந்திரன், மணிமேகலை, ராஜேந்திரன், சுசிலா, சங்கர் என 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். சங்கருக்கு முதல் திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். மீண்டும் 2-வது முறையாக திருமணம் செய்து அவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். சங்கருக்கு குழந்தை ஏதுமில்லை. இந்நிலையில் சங்கருக்கும், அவரது அண்ணன் ராஜேந்திரனுக்கும் இடையே இடம் சம்பந்தமான தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சங்கருக்கு சொந்தமான இடத்தில் உள்ள புளியமரத்தில் ராஜேந்திரன் குடும்பத்தினர் புளி உலுக்கியுள்ளனர். இதனால் சங்கர் மற்றும் ராஜேந்திரனுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் கவுண்டன், கவிதா ஆகிய மூவரும் சேர்ந்து சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சங்கர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான ராஜேந்திரன், கவுண்டன், கவிதா ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.


Next Story