திருவண்ணாமலையையும், தி.மு.க.வையும் பிரித்து பார்க்க முடியாது


திருவண்ணாமலையையும், தி.மு.க.வையும் பிரித்து பார்க்க முடியாது
x

திருவண்ணாமலையையும், தி.மு.க.வையும் பிரித்து பார்க்க முடியாது என்று பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையையும், தி.மு.க.வையும் பிரித்து பார்க்க முடியாது என்று பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

எதிலும் வல்லவர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மலையை சுற்றி மக்கள் கிரிவலம் செல்வார்கள். ஆனால் இன்று நான் திருவண்ணாமலையை சுற்றி வர கூடிய சூழ்நிலையை எ.வ.வேலு உருவாக்கி வைத்திருக்கிறார்.

திருவண்ணாமலை உச்சியில் தான் பொதுவாக தீபம் ஒளிரும். ஆனால் இன்றைய தினம் திருவண்ணாமலை நகரம் முழுவதும் ஒளிமயமாக காட்சி அளிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.வின் பொதுக்கூட்டம் எழுச்சியோடு மாநாடு போன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த வாரத்தில் திருப்பத்தூர், கரூர் மாவட்டங்களில் கூட்டம் நடைபெற்றது. அதைவிட திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதைகாணும் போது என்னையே திக்குமுக்காட வைத்திருக்கிறார் எ.வ.வேலு.

கழகத்தின் விழா வேந்தர் என்றால் அவர் தான். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பணியாற்றுங்கள் என்று சொன்னாலும் கழகத்தில் உள்ள சிலைகள் துறை, மணிமண்டபம் துறை, விழாக்கள் துறை, சிறப்பு மலர்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவரது பங்கு உள்ளது.

எ.வ.வேலு என்று சொன்னால் எதிலும் வல்லவர். அவரிடம் ஒரு வேலையை கொடுத்தால் எதையும் பற்றி கவலைபட வேண்டாம். சொன்ன நாளில் மேடைக்கு வந்தால் போதும். அந்த அளவிற்கு கனகச்சிதமாக முடித்து காட்ட கூடியவர் எ.வ.வேலு.

கலைஞரின் சிலை

ஆற்றல் உள்ளவர்கள் அதே அளவுக்கு வேலை பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆற்றலும், ஆர்வமும் கொண்ட அவரது முயற்சியால் தான் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில், பல்வேறு மாவட்டங்களில் கலைஞரின் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அவை கம்பீரமாக காட்சி அளித்து கொண்டிருக்கின்றன. ஊரெல்லாம் அமைத்து வைத்து விட்டு தன்னுடைய ஊரிலே கலைஞரின் சிலையை அமைத்து அழைத்து வந்து இருக்கிறார் வேலு.

அதனால் அவருக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். அவருக்கு நான் நன்றி சொல்வது எனக்கு நானே நன்றி சொல்வதற்கு சமமாகும்.

வெளிப்படையாக பாராட்ட வேண்டியது எனது கடமை என்ற அடிப்படையில் நான் அவரை பாராட்டி விடுகிறேன். அவருக்கு தோளோடு தோள் கொடுத்து பணியாற்றி வருகிறார் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி. கலைஞரின் சிலை கம்பீரமாக அமைக்க உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணா பெயரில் அமைக்கப்பட்டு உள்ள நுழைவு வாயில் இன்று கம்பீரமாக திறந்து வைக்கப்பட்டு உள்ளது. தமிழர் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழி வகுத்தவர் அண்ணா. தலை நிமிர்ந்து நின்ற தமிழனத்தை தனது தொலைநோக்கு பார்வையால் தீட்டிய திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர். அதனால் தான் கலைஞரின் சிலையில் கை வானத்தை நோக்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறார்.

இந்தி எதிர்ப்பு மாநாடு

அண்ணாவும், கலைஞரும் திருவண்ணாமலையில் உயர்ந்து நிற்கிறார்கள் என்று சொன்னால் தமிழினம் உயர்ந்து இருக்கிறது. தமிழகம் அனைத்து துறையிலும் வளர்ச்சி பெற்று உள்ளது.

முற்போக்கு சிந்தனை கொண்ட தமிழர்கள் முன்னேற்றம் அடைந்த சமுதாயம் வளர்ந்து உள்ளது என்று பொருள். திருவண்ணாமலையையும், தீபத்தையும் எப்படி பிரித்து பார்க்க முடியாதோ, அதேபோல தான் திருவண்ணாமலையையும், தி.மு.க.வையும் பிரித்து பார்க்க முடியாது.

கட்சி உருவான முதல் பொதுக்கூட்டத்தில் 1451 ரூபாய் வசூலானது. அதில் 100 ரூபாய் கொடுத்தது யார் என்றால் திருவண்ணாமலையை சார்ந்த ப.வு.சண்முகம் தான். கழகம் முதல்முதலாக தேர்தலில் போட்டியிட்ட 1957-ல் 15 சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றனர்.

இதில் 3 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். ப.வு.சண்முகம், பி.எம்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை ஆகிய 3 பேரும் வென்றனர். அதுமட்டுமின்றி கட்சி போட்டியிட்ட முதல் நாடாளுமன்ற தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றோம்.

திருவண்ணாமலை தொகுதியில் இரா.தருமலிங்கம் வென்றார். அந்த அளவிற்கு கட்சிக்கு அடிதளமாக அமைந்த ஊர்தான் திருவண்ணாமலை.

அதனால் தான் அண்ணாவின் பெயரில் நுழைவு வாயில், கலைஞரின் சிலை அமைப்பதற்காக பொருத்தமான ஊர் திருவண்ணாமலை. 1957-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பிறகு வட ஆற்காடு மாவட்ட மாநாட்டை எங்கு நடத்தலாம் என்று அண்ணா சிந்தித்தார்.

திருவண்ணாமலையில் 2 நாட்கள் மாநாட்டை நடத்தினார். அப்போது இந்தி ஆதிக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் முதல் நாள் இந்தி எதிர்ப்பு மாநாடு, 2-ம் நாள் தி.மு.க. மாநாடு நடைபெற்றது.

அந்த வகையில் தமிழ் மொழியை காக்கவும், இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கவும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டியாக திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலும் கலைஞருக்கு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது மிகமிக பொருத்தமானதாகும்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்

1963-ம் ஆண்டு திருவண்ணாமலையில் இடைத்தேர்தல் வந்த போது அதற்கு தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர் கலைஞர். அவரின் உழைப்பாலும் திருவண்ணாமலை சார்ந்தவர்களின் உழைப்பாலும் அந்தத் தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது.

மலையையே கைப்பற்றிய மகிழ்ச்சியில் தலைவர் கலைஞர், அண்ணாவை சந்திக்க சென்றார். அண்ணா கலைஞரை பார்த்து கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அந்த திருவண்ணாமலை இடைத்தேர்தல் வெற்றிதான் அடுத்து வந்த பொதுத்தேர்தலில் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. வெற்றி கூட்டத்தில் இந்தத் தேர்தல் வெற்றி தான் அடுத்த தேர்தலுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எடுத்து காட்டியதாக கலைஞர் தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் கிடையாது. உணவை மறந்து, உயிரைக் கொடுத்து தொண்டர்களை ஊருக்கு, ஊர் உருவாக்கினோம். முதன்முதலாக கட்சி ஆட்சி அமைய களம் அமைத்து வெற்றியைப் பெற்ற இடம் திருவண்ணாமலை. இங்கு கலைஞருக்கும், அண்ணாவுக்கும் சிறப்பு செய்யப்படுவது மிக மிகப் பொருத்தமாகும்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்றும் பயணத்தை இந்த தொகுதியில் தான் தொடங்கினேன். அதன் பிறகு பல தொகுதிகளுக்கு சென்றேன். அப்போது தமிழ்நாட்டில் பல மக்களின் கோரிக்கைகளை மனுக்களை பெற்றேன்.

கம்பீரமாக வந்து உள்ளேன்

உங்களது கவலைகளை நான் என்னுடைய கவலை என்று நினைத்தேன். ஆட்சி அமைத்த பின்பு 100 நாட்களில் தீர்வு காண்பேன் என்று கூறினேன். என்னிடம் மனு கொடுத்தால் நிறைவேறும் என நினைத்து லட்சக்கணக்கான மக்கள் மனுக்கள் அளித்தனர்.

அதுதான் தி.மு.க. வெற்றி பெற அடித்தளமாக அமைந்தது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இதன் தொடக்கம் திருவண்ணாமலை தான்.

மக்கள் அரசாக, மக்கள் நலன் விரும்பும் அரசாக, கவலைகள் போக்கும் அரசாக தி.மு.க. அமையும். உங்கள் கோரிக்கைகள், மனுக்கள் என் முதுகில் ஏற்றி வைத்திருக்கிறேன் என்று அப்போது கூறினேன்.

நம்பிக்கையோடு செல்லுங்கள் தி.மு.க. தான் ஆட்சி அமையும் என்றும் கூறினேன். இந்த ஓராண்டு காலத்தில் மக்களின் அரசாக, மக்கள் நலம் விரும்பும் அரசாக கவலைகள் போக்கும் அரசாக இன்னும் சொல்லப்போனால் பெருமையுடன் சொல்லப்போனால் திராவிட மாடல் ஆட்சியாக அமைந்துள்ளது.

தமிழின் பெருமை வளர்க்கும் அரசாக தி.மு.க. உள்ளது. அண்ணாவின் ஆசை, கலைஞரின் கனவு போன்றவை நிறைவேற்றி விட்டு நான் இங்கு திருவண்ணாமலைக்கு நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக வந்துள்ளேன். எனது கடமைகளை நான் சரியாக செய்து வருகிறேன்.

கலைஞர் மீது ஆணை

தந்தை பெரியார் போன்ற ஆசிரியரும், கலைஞர் போன்ற மாணவரும் யாரும் அமைந்திருக்க மாட்டார்கள் என்று அண்ணாவே சொல்லியிருக்கிறார்.

கட்சி இவ்வளவு வளர்ந்து இருக்கிறது என்று சொன்னால் கலைஞரின் தொண்டு முக்கியமான காரணம் என்று அவர் சொல்லிஉள்ளார். கலைஞரின் தொண்டால் மறக்க முடியாது திருவண்ணாமலை இடை தேர்தல் வெற்றி பெற்றது மட்டுமல்ல, சென்னை மாநகராட்சி கைப்பற்றியது மட்டுமல்ல, புதுச்சேரியில் காட்டுமிராண்டி தனமாக தாக்கப்பட்ட சம்பவம் மறக்கமுடியாதது.

பேரறிஞர் அண்ணா, கலைஞரை போற்றுகிறோம் என்றால் எதோ விழா நடத்துவதன் மூலம் நின்று விட கூடாது. அவர்களை போன்று ஆற்றலை, செயல்களை பெற்றாக வேண்டும். அவர்களை போன்று உழைத்தாக வேண்டும்.

உங்களது ஆற்றலும், செயலும், உழைப்பும் தி.மு.க.வுக்கும், அதன் மூலம் தமிழ்நாட்டிற்கும் பயன்பட வேண்டும். அரை நூற்றாண்டு காலத்தில் தி.மு.க. உழைத்த உழைப்பால் தீட்டிய திட்டங்களால் தமிழ்நாடு மேன்மை அடைந்தது.

கட்சி வளர்ச்சியால் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி அடங்கி உள்ளது. தமிழ் மொழிக்கும், இனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் காவல் அறன் தி.மு.க. தான்.

இங்கு திறக்கப்பட்டு உள்ள கலைஞரின் சிலை அல்ல கலைஞரின் கொள்கை மலை. அந்த சிந்தனையோடு ஒவ்வொருவரும் பெரியாராகவும், அண்ணாவாகவும், கலைஞராகவும் கழகத்திற்கும், நாட்டிற்கும் உழைக்க வேண்டும்.

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் எங்களுக்கு 2 எஜமானர்கள் உள்ளார்கள் என்று அண்ணா சொன்னார். ஒன்று மனசாட்சி, மற்றது இந்த நாட்டு மக்கள் என்று அவர் சொன்னார்.

மனசாட்சியையும், நாட்டு மக்களையும் தாண்டி நாம் அஞ்சுகின்ற பொருள் வேறு எதுவும் இல்லை. எந்த எண்ணத்தோடு தி.மு.க. ஆட்சி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு வாக்களித்தீர்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவேன் என்று அண்ணா, கலைஞர் மீது ஆணையாக சொல்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story