வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் உஷாராக இருங்கள்


வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் உஷாராக இருங்கள்
x
தினத்தந்தி 7 Nov 2022 6:45 PM GMT (Updated: 7 Nov 2022 6:45 PM GMT)

சுற்றுலா விசாவில் அழைத்துச்சென்று மோசடி நடைபெறுவதை தடுக்க வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம், நவ.8-

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மோசடி

தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி படிக்கும் இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர், கம்போடியா ஆகிய நாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேஸ்ட் அண்ட் மார்க்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவ் வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச்சென்று கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல்கள் பெறப்படுகிறது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் விழுப்புரம் மாவட்டத்தைச்சேர்ந்த இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையாக பணி ஒப்பந்தம், என்ன பணி என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்துகொள்ள வேண்டும்.

உஷாராக இருக்க அறிவுரை

மேலும் அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால் தமிழ்நாடு அரசையோ அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களையோ தொடர்புகொண்டு பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்துெகாள்ள வேண்டும், மத்திய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச்செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படியும் வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story