இன்று, போகிப்பண்டிகை கொண்டாட்டம்: டயர், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை-கலெக்டர் சாந்தி எச்சரிக்கை


இன்று, போகிப்பண்டிகை கொண்டாட்டம்: டயர், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை-கலெக்டர் சாந்தி எச்சரிக்கை
x

போகி பண்டிகை இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுப்புற சூழலுக்கு மாசுபாடு ஏற்படுத்தும் வகையில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி எச்சரித்துள்ளார்.

தர்மபுரி

உடல் நல பிரச்சினைகள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழர் திருநாளான பொங்கலுக்கு முதல் நாளான இன்று (சனிக்கிழமை) போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். கிழிந்த பாய்கள், பழைய துணிகள் தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும் கிராமங்களில் கடைபிடிக்கும் இந்த பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெருந்தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.

ஆனால் இப்போது மக்கள் நெருக்கம் நிறைந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்கும்போது நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல் மற்றும் கண் பாதிப்பு, மூக்கு எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நச்சு புகை கலந்த பனி மூட்டத்தால் சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது.

கடும் நடவடிக்கை

இது போன்ற செயல்களை மேற்கொள்ள ஐகோர்ட்டு தடை செய்துள்ளது. பழைய மரம், வறட்டி ஆகியவற்றை தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது. எனவே தடையை மீறி சுற்றுப்புற சூழலுக்கு மாசுபாடு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசு இல்லாமலும் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story