தக்காளி விலை கிடுகிடு உயர்வு


தக்காளி விலை கிடுகிடு உயர்வு
x

பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தக்காளி சாகுபடி

பாலக்கோடு பகுதியில் பெல்ரம்பட்டி, பேளாரஅள்ளி, பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய், மாரண்டஅள்ளி, தும்பலஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் விளையும் தக்காளிகள் அறுவடை செய்யப்பட்டு பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இந்த தக்காளியை வியாபாரிகள் வாங்கி சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்தை பொறுத்து நாள் ஒன்றுக்கு 200 டன் முதல் 500 டன் வரை தக்காளிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தக்காளி வரத்து அதிகரித்ததால் ஒரு கிலோ ரூ.2 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்பட்டது.

விலை உயர்வு

இந்தநிலையில் தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பாலக்கோடு பகுதியில் தொடர்ந்து பருவமழை பெய்ததால் தோட்டத்தில் மழைநீர் தேங்கி, பழங்கள் அழுகின. இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரூ.450-க்கு விற்பனையானது. வெளி மார்க்கெட்டில் ரகத்திற்கு ஏற்ப ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையானது.

மேலும் இனி வரும் வாரங்களில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story