நில பட்டாமாற்றம் செய்யலஞ்சம் வாங்கியகிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு ஜெயில்


தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர்

தூத்துக்குடி கிப்சன்புரத்தை சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன் (வயது 55). இவருடைய அண்ணி ராணி என்பவர் பெயரில் ஒரு நிலத்தின் பட்டா மாற்றுவதற்காக பேரூணி கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாவிடம் மனு கொடுத்து உள்ளார். அப்போது சுப்பையா, பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதுகுறித்து அனந்தகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த 11.10.2010 அன்று அனந்தகிருஷ்ணனிடம் இருந்து லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தை வாங்கிய போது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் சுப்பையாவை கைது செய்தனர்.

2 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.செல்வக்குமார், குற்றம் சாட்டப்பட்ட சுப்பையாவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜென்சி ஆஜர் ஆனார்.


Next Story